Eyeview Sri Lanka

கேரளாவின் மதிப்புமிக்க ITFOK விழாவின் நிறைவாக ஸ்டேஜஸ் அரங்கக் குழுவினரின் ‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’

Share with your friend

இலங்கையின் நன்மதிப்பிற்குரிய அரங்கக்குழுக்களில் ஒன்றான ஸ்டேஜஸ் அரங்கக் குழு, கேரளாவின் 15வது சர்வதேச நாடக விழாவின் (ITFOK) நிறைவான இறுதிக் காட்சியாக அன்பின் சிறுவர்களே, உண்மையுடன் – இலங்கையின் 7 தசாப்தங்கள் எனும் காட்சியை அரங்கேற்றுவதற்கு அழைக்கப்பட்டது. கேரளா சங்கீத நாடக அக்கடமி மற்றும், கேரளா கலாசாரத் துறையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட தென்னாசியாவின் மதிப்புமிக்க நாடக விழாக்களில் ஒன்றின் முக்கியமான இடத்தில் இக்காட்சி அரங்கேற்றப்பட்டமை இலங்கை நாடக வெளியில் குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும்.

2025 பெப்ரவரி 23 தொடக்கம் மார்ச் 2 வரை இடம்பெற்ற இவ்விழா, திரிசூரில் நிகழ்ந்த ‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’ இன் காட்சிப்படுத்தலுடன் நிறைவடைந்தது.

மைல்கல்லான ஒரு வருடத்தின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு

இவ்வழைப்பு, ஸ்டேஜஸ் அரங்கக் குழு, தனது 25 வருடகால புதுமையான கதைசொல்லலைக் கொண்டாடும் தருணத்தில் வந்தடைந்தது. 2000 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, சுமார் 35இற்கும் மேற்பட்ட, சுயமாக தயாரிக்கப்பட்ட நாடகங்களை வழங்கிய எமது அரங்கக் குழு, உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் பார்வையாளர்கள் தம்முடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமான, துணிச்சல் மிகுந்த, சமூகம் சார்ந்த நாடகங்களை தனது அடையாளமாக்கிக் கொண்டுள்ளது.

பின் காலனித்துவ மாற்றங்களைப் பற்றிய சக்திவாய்ந்த ஒரு கதை

‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’ ஆனது, 2016இல் உருவாக்கப்பட்ட, இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான வரலாற்றைக் கூறும், வலுவாகக் கவர்ந்திழுக்கக்கூடிய ஓர் அரங்கப் பயணமாகும். 1930களில் பிறந்த இலங்கையர்களுடன் மேற்கொள்ளப்பட்ட 60இற்கும் மேலான நேர்காணல்களை அடிப்படையாக்கொண்டு, இந்நாடகம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக பரிணாமத்தின் நுணுக்கமான காட்சியை வழங்குகிறது. இது பின்வரும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மீள்நோக்குகிறது:

•            நாட்டின் சுதந்திரம் மற்றும் தனிச்சிங்களச் சட்டத்தின் அமுலாக்கம்

•            ஆங்கிலம் பேசும் மேற்குடி மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

•            ஒரு தலைமுறையை வடிவமைத்த இளைஞர் கிளர்ச்சிகள்

•            பேரழிவான 30 வருட கால உள்நாட்டுப் போரும் அதன் கொடூரமான முடிவும்

உண்மைக் குரல்களிலிருந்தும், வாழ்வனுபவங்களிலிருந்தும் கட்டியெழுப்பப்பட்ட இந்த சக்திவாய்ந்த கதைப்பகுதி, இந்தியப் பார்வையாளர்களுக்கு, சுதந்திரம், மொழிசார் கொள்கைகள், சமூக-அரசியல் எழுச்சிகள் நிரம்பிய தம் வரலாற்றுடன் ஒத்ததாக அமையும், அவ்வரலாற்றுடன் சமாந்தரமாகப் பயணிக்கும், இலங்கையின் பின் காலனித்துவ பாதைப் போக்குடன் ஓர் உரையாடலைத் தொடர அரிய சந்தர்ப்பமொன்றை வழங்கியது.

முதன்முறை: பன்மொழி அணுகலுடனான தமிழ் காட்சி

கேரளாவில் பரந்தளவிலான பார்வையாளர்களை அணுகும் முகமாக முதன்முறையாக, ‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’ ஆங்கிலம் மற்றும் மலையாள துணைவரிகளுடன், பெரும்பாலும் தமிழ்மொழியில் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கை மற்றும் தென்னிந்தியாவிற்கிடையேயான மொழிசார்ந்த தொடர்புகளைக் கருத்திற்கொண்டு நோக்குமிடத்து, இப் பன்மொழி அணுகல்முறை குறித்த நாடகத்தின் கலாசார முக்கியத்துவத்தை மேலும் ஆழப்படுத்தியதுடன், பகிரப்பட்ட வரலாறுகள் தொடர்பான எல்லைகள் தாண்டிய உரையாடலையும் ஊக்குவிப்பதாக அமைந்தது.

இலங்கைக் நாடகத்துறைக்கு பெருமை சேர்த்த தருணம்

ITFOK இன் இறுதிக் காட்சியாக தெரிவுசெய்யப்பட்டமை, ஸ்டேஜஸ் அரங்கக் குழுவின் சமகால தென்னாசிய நாடகத்துறைக்கான பங்களிப்பிற்காகக் கிடைத்த குறிப்பிடத்தக்கதொரு அங்கீகாரமாகும். இப் பெருமை, ‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’  இனை இலங்கையர்கள் மட்டுமன்றி, நாடுகளை வடிவமைக்கும் சக்திகளைப் பற்றி ஆர்வமாயுள்ள அனைவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய ஒரு தயாரிப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியது. 

இம் முக்கியமான பயணத்தைத் தொடரும் ஸ்டேஜஸ் அரங்கக் குழு, பிரதிபலிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும், அர்த்தமிக்க உரையாடல்களில் ஈடுபடுவதற்குமான ஒரு கருவியாக நாடகத்தை பயன்படுத்துவதற்கான தனது தீர்மானத்தை வலியுறுத்தி நிற்கிறது. ITFOK இல் ‘DCS – இலங்கையின் ஏழு தசாப்தங்கள்’ இன் அரங்கேற்றமானது, குழுவின் 25 வருடகால மரபுப்புகழின் கொண்டாட்டம் மட்டுமல்லாது, உலக அரங்கில், இலங்கையின் நாடகத்துறைக்கும் ஒரு முக்கியமான தருணமாகும்.

காட்சி ITFOK 2025 திரிசூரில் இடம்பெற்றது


Share with your friend
Exit mobile version