DFCC வங்கி GoodLife X உடன் இணைந்து காலநிலை நடவடிக்கை முயற்சிகளுக்கான ஒரே நிதியியல் நிறுவன கூட்டாளராக மாறியுள்ளது

Share with your friend

நிலைபேற்றியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் முன்னணி வகித்து வருகின்ற DFCC வங்கியானது, நிதி வழங்குநர் என்ற தனது பங்களிப்பின் மூலம் இலங்கையில் நிலைபேற்றியல் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்தியை ஊக்குவித்து வருகிறது. நிலைபேற்றிலுடனான எதிர்காலத்தை நோக்கி இலங்கையை வழிநடத்துவதற்கான அதன் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி, வங்கி அதன் காலநிலை நடவடிக்கை முயற்சிகளுக்காக ஒரே நிதியியல் நிறுவன கூட்டாளராக Good Life X உடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

Good Life X விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் காலநிலை மாற்றம் மற்றும் மாற்றத்தை உள்வாங்குதல் ஆகியவற்றில் பணிகளை மேற்கொள்வதுடன், சந்தைத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய வணிகங்கள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த தீர்வுகளை இலங்கை எங்கிலும் விரிவுபடுத்துவதற்காக தொடக்க வணிக முயற்சிகளுடன் இணைந்து பணியாற்றும். உரிமம் பெற்ற வங்கிகளின் நிலைபேண்தகு நிதியியல் நடவடிக்கைகள் குறித்த 2022 ஆம் ஆண்டின் வங்கிச் சட்டத்தின் இலக்கம் 5 இல் இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ள இரண்டு முன்னுரிமைத் துறைகளில் இந்த பணி கவனம் செலுத்துகிறது. அதன் நிலைபேண்தகு நிதியியல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, உரிமம் பெற்ற வங்கிகள் மத்தியில் நிலைபேண்தகு நிதியியல் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், நிலைபேண்தகு அபிவிருத்திக்கு இடமளிக்கவும் இது செயல்பட்டு வருகின்றது.   

கூட்டாண்மையை உத்தியோகபூர்வமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் DFCC வங்கி மற்றும் Good Life X ஆகிய நிறுவனங்களால் 2022 செப்டெம்பர் 9 அன்று DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில், இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. DFCC வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு திமால் பெரேரா மற்றும் நிலைபேற்றியல் முயற்சிகளுக்கான உதவித் துணைத் தலைமை அதிகாரியான திரு சேனக ஜயசிங்க, மற்றும் Good Life X சார்பாக அதன் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரந்துலா டி சில்வா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

இந்த முயற்சியானது, இரு தரப்பினரும் தங்கள் பலங்களை ஒன்றிணைத்து, உள்ளூர், பிராந்திய மற்றும் உலக அளவில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை வலுப்படுத்தவும், நிலைபேற்றியல் மற்றும் காலநிலை மாற்றத்தைச் சார்ந்த தொழில் முயற்சியாளர் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கு மேலும் ஒத்துழைப்பை ஆராய்வதற்கும் உதவும்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு திமால் பெரேரா அவர்கள், “நிலைபேற்றியல் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் DFCC இல் எங்களின் விழுமியங்கள் மற்றும் எங்களின் நெறிமுறைகளுடன் உள்ளார்ந்தவையாகும். எங்களின் நிலைபேற்றியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் இலங்கையில் நிலைபேண்தகு மற்றும் சமத்துவ சுபீட்சத்துடனான எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம். ஆகவே, இந்த கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பின் மூலம், இலங்கை மத்திய வங்கி அதன் நிலைபேண்தகு நிதியியல் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் கண்டுள்ள இரு முன்னுரிமைத் துறைகளான விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு முக்கிய துறைகளில் நாங்கள் பணியாற்றுவோம். இவை காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரத்தின் இரண்டு துறைகள். மேலும் இந்தத் துறைகள் இந்த மாற்றங்களுக்கு ஏற்பவும், அவற்றைத் தழுவிக்கொள்ளவும் உதவுவதில் முன்னணியில் இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அதே நேரத்தில் பொருளாதாரத்தின் மத்தியில் நிலைபேண்தகு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கேற்றவாறு உள்வாங்கிக்கொள்ளும் திட்டங்களில் ஒரே நிதியியல் நிறுவன கூட்டாளராக, DFCC வங்கியானது, இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, நிலைபேற்றியலின் அடிப்படையில் வங்கி ஏற்கனவே கொண்டுள்ள நிபுணத்துவத்தின் துணையுடன், தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் அறிவுப்பகிர்வு அமர்வுகளை நடத்தும்.  வங்கியானது தனது தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் பரஸ்பர நலன்களுக்கு அமைவாக ஏயை தரப்பினருடன் வணிக வாய்ப்புக்களை திட்டமிட்டு, நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பவர்களை இணைக்கு வகையில் “வணிக இணைப்புப் பாலம்” ஆகவும் செயல்படும். அத்துடன் மிகச் சிறந்த முயற்சிகளின்ட அடிப்படையில் பங்கேற்கும் வணிக நிறுவனங்களுக்கு வங்கிச்சேவை வசதிகளையும் வழங்கும்.

இடமிருந்து வலமாக நிற்பவர்கள் – DFCC வங்கியின் பிரதிநிதிகள், DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. திமால் பெரேரா, Good Life X இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரந்துலா டி சில்வா மற்றும் Good Life X இன் பிரதிநிதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சி.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply