நாடு முழுவதிலும் உள்ளூராட்சி சபைகளின் திறனை கட்டியெழுப்ப Prime Group மற்றும் FSLGA இடையே பொது-தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Share with your friend

நாடு முழுவதையும் சேர்ந்த உள்ளூராட்சி சபை அதிகாரிகளின் திறனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை உள்ளூராட்சி சபைகளின் சம்மேளனத்துடன் (FSLGA), இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் குழுமமான Prime Group கைச்சாத்திட்டுள்ளது.

பயிற்சி மற்றும் அறிவு-பகிர்வு நிகழ்ச்சிகள், சேவை விநியோகத்தை வலிமைப்படுத்தல், வெளிப்படைத்தன்னமை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதனூடாக, உள்ளூராட்சி சபை அதிகாரிகளின் திறன் கட்டியெழுப்பல் மற்றும் வலுவூட்டலுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்பாடுகள் கலாநிதி. கிறிஷாந்த பதிராஜ அவர்களுடன் கலந்தாலோசனைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றன.

Prime Group இன் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு கட்டமைப்பான “Prime Rajya Sewa Abhiman” எனும் திட்டத்தின் கீழான இணைந்த முயற்சியாக அமைந்திருப்பதுடன், அர்த்தமுள்ள சமூக அபிவிருத்தி மற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமாக திகழ்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருந்தது. FSLGA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர, ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி தனியார் நிறுவனம் மற்றும் தேசிய உள்ளூராட்சி மன்றங்களின் அமைப்புக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பாரிய பொது-தனியார் பங்காண்மையாக இது அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Prime Group தவிசாளர் பிராஹ்மனகே பிரேமலால் கருத்துத் தெரிவிக்கையில், “Prime Groupஇல், வலுவூட்டப்பட்ட அரச ஊழியர்களிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது ஆரம்பமாகிறது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது, ஒரு பங்காண்மை என்பதற்கு மேலானது. உள்ளூராட்சி ஆளுகையின் முதுகெலும்பை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பாக இது அமைந்துள்ளது. திறன் கட்டியெழுப்பல் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றில் முதலீடு செய்வதனூடாக, உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கு சிறந்த வினைத்திறன், பொறுப்புக்கூரல் மற்றும் தொலைநோக்குடன் செயலாற்றுவதற்கு வலுச்சேர்க்கிறோம். பெருமைக்குரிய இலங்கை நிறுவனம் எனும் வகையில், பொது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவது என்பது, பொறுப்பாக மட்டும் அமைந்திராமல், எமது DNA இன் அங்கமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

இதுவரையில் Rajya Sewa Abhiman திட்டத்தினூடாக, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு நகரங்களில் பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக 150 அரச ஊழியர்களுக்கு அவசியமான மென் திறன், தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் நேர்த்தியான நடத்தை வழிமுறைகள் ஆகியவற்றை வழங்கி, அவர்களின் ஒட்டுமொத்த வினைத்திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில், FSLGA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் பரந்தளவிலானவை. மனிதனின் முழு வாழ்க்கை சுழற்சியிலும் தொடர்வதாக அமைந்துள்ளன. எனவே, 341 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்களின் திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவது முக்கியமானதாகும். இந்த சவாலை அரசாங்கத்தினால் தனித்து எதிர்கொள்ள முடியாது. அவ்வாறான சூழலில், தனியார் துறை நிறுவனங்கள் இதனை உணர்ந்து, தமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவளித்து, வலிமைப்படுத்த முன்வருகின்றமை உண்மையில் வரவேற்கப்பட வேண்டியது. இந்த முக்கியமான முயற்சியில் அர்த்தமுள்ள வகையில் கைகோர்த்துள்ளமைக்காக Prime Group க்கு நன்றியை தெரிவிக்கிறோம்.” என்றார்.

Prime Group மற்றும் FSLGA ஆகியவற்றுக்கிடையிலான இந்த முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையினூடாக, உள்ளூராட்சி மன்றங்களின் திறனை மேம்படுத்துவதற்கான பொது-தனியார் பங்காண்மையில் புதிய யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு வலுவூட்டுவது மற்றும் இலங்கையில் சமூக தாக்கத்தை வலிமைப்படுத்துவது போன்றவற்றுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.


Share with your friend