நவீன பொறியியல் நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை பரிமாற்றுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த 25 மாவட்டப் பொறியாளர்களுக்கு, நவீன பொறியியல் நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சுடன் ஒரு வருட காலப்பகுதிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் INSEE Cement இன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது நீர்ப்பாசன அமைச்சர், அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரான கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் INSEE மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளரான திரு. என்.எச்.எம்.சித்ரானந்தா மற்றும் INSEE Cement நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கங்களுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியான திரு. ஜான் குனிக் ஆகியோர் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றிக் கொண்டனர்.
“இலங்கை நிர்மாணத்துறையின் தரத்தினை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கு INSEE Cement நிறுவனத்தின் ஆணையில் தொழில்துறை அறிவு மற்றும் திரட்டப்பட்ட நிபுணத்துவத்திற்கான அணுகலைப் பகிர்வது, பரிமாறிக்கொள்வது மற்றும் மேம்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது,” என்று ஜான் குனிக் அவர்கள் இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டார். “இந்த அணுகுமுறையின் மூலம் ஒரு கூட்டுத் தொழில்துறை பங்குதாரர் சமூகம் மிகவும் திறன் மிக்கதாகவும், புத்தாக்கமானதாகவும் வளர்ச்சி காண்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கும், உள்ளூர் தொழில்துறை தரங்கள், திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேலும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் ஆவலாக உள்ளோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
“INSEE Cement போன்ற தொழில்துறை முன்னோடிகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் வளர்ந்து வரும் உலகளாவிய பொறியியல் நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்கு எமது பொறியியலாளர்களுக்கு வழிகோலுகிறது,” என கௌரவ அமைச்சரான சமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “புத்தாக்கங்களை மேம்படுத்துவதற்கும், அறிவு மற்றும் வளப் பகிர்வு நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் தொழில்துறை தரத்தை மேம்படுத்துவதற்கும் INSEE Cement காண்பிக்கும் உற்சாகத்தால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம். மேலும், இது இலங்கையில் அரச-தனியார் தொழிற்துறை ஒத்துழைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையின் கீழ், கொள்முதல் மற்றும் ஒப்பந்த நிர்வாகம், பலவீனமான மண்ணில் அத்திவாரமிடல் (அத்திவார குத்துக்கால் பணி), உயர்ந்த கட்டடங்களில் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவக் கட்டமைப்புகள், HVAC (வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் குளிரூட்டல்) கட்டமைப்புக்கள், தீ பாதுகாப்பு மற்றும் கண்டறிதல் கட்டமைப்புக்கள், HV (உயர் மின்னழுத்தம்) மற்றும் LV (தாழ் மின்னழுத்தம்) விநியோகத்தின் அடிப்படைகள், திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கிராமப்புற சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் முழு நாள் பயிற்சி அமர்வுகள் ஒரு இடத்தில் மாதம் இரண்டு முறை என்ற அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.