New Anthoney’s Group ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் பதப்படுத்திய உணவு பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக தெரிவு

Share with your friend

இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney’s Group, அண்மையில் நடைபெற்ற 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், பதப்படுத்திய உணவுகள் பிரிவில் “சிறந்த ஏற்றுமதியாளர்” விருதை பெற்றுக் கொண்டது. அதனூடாக, தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதில் தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் வளர்ந்து வரும் வலிமை ஆகியவற்றை மீள உறுதி செய்திருந்தது.

New Anthoney’s Group தவிசாளர் எமில் ஸ்டான்லி (இடம்) விருதைப் பெற்றுக் கொள்கிறார்.

இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான உயர்ந்த கௌரவிப்பு நிகழ்வாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வினூடாக, அதிசிறந்த வளர்ச்சி மற்றும் வினைத்திறன் ஆகியன கொண்டாடப்படுகின்றன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வினூடாக, ஏற்றுமதித் துறையின் சிறப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.

பதப்படுத்திய மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான சர்வதேச கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளது. நகர மயமாக்கல், மாறிவரும் நுகர்வோர் வாழ்க்கை முறைகள் மற்றும் சௌகரியத்தை நாடல் போன்றன இதில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன. உணவு பாதுகாப்பு, நிலைபேறாண்மை மற்றும் உயர் தர புரத மூலங்கள் போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் நிலையில், கோழி இறைச்சித் துறையும், உலகளாவிய ரீதியில் அதிகளவு கேள்விக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது.

New Anthoney’s Group தனது ஏற்றுமதி செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வதனூடாக, பிரதான செயற்பாட்டாளராக நிலைநிறுத்தியுள்ளதுடன், உயர்தர, அன்ரிபயோடிக் இல்லாத மற்றும் நிலைபேறான முறையில் தயாரிக்கப்பட்ட கோழி இறைச்சியினூடாக சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கின்றது. தவிசாளர் எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில் ‘‘சர்வதேச சந்தைகளுக்கான எமது விரிவாக்கம் என்பது, வாடிக்கையாளர்கள் எமது வர்த்தக நாமத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அனைவருக்கும் பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் முன்னேற்றங்களை பதிவு செய்த வண்ணமுள்ளோம்.” என்றார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில் ‘‘நிலைபேறான கோழி இறைச்சி, உணவு பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்துகின்றமையினூடாக, சர்வதேச நியமங்களை நாம் பூர்த்தி செய்து, விஞ்சுவதை மாத்திரம் உறுதி செய்யாமல், தேசத்தின் விவசாயவியாபாரத்தையும் வலிமைப்படுத்துகிறோம். நாம் கோழி இறைச்சியை மாத்திரம் ஏற்றுமதி செய்யவில்லை – உலகத் தரம் வாய்ந்த உணவுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் ஆற்றலை நாம் வெளிப்படுத்துவதுடன், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்குகின்றோம்.’’ என்றார்.

பதப்படுத்திய உணவு வகைகள் பிரிவின் பல்வேறு வர்த்தக நாமங்களுடன், Anthoney’s நாமமும், போஷாக்கு நிறைந்த, அன்ரிபயோடிக் இல்லாத மற்றும் சுவையான இறைச்சி தயாரிப்புகளை வழங்குவதில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடுமையான சர்வதேச கோழி இறைச்சி நியமங்களை பின்பற்றுவதினூடாக தரத்தில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், GMP, HACCP, ISO 22000 போன்ற சான்றிதழ்களுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

இலங்கையில் 100 சதவீதம் உக்கும் பொதியிடல் முறைமையை பின்பற்ற ஆரம்பித்த முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராக திகழ்வதுடன், தனது “ஹரிதஹரி” கோழி இறைச்சி தெரிவில் புதுப்பிக்கத்தக்க தாவரங்கள் அடிப்படையிலான மூலப்பொருட்களை பயன்படுத்தி இந்த பொதியிடல் முறையை பின்பற்றுகின்றது. ISO 14064-1:2018 நியமங்களின் பிரகாரம், நெதர்லாந்தை தளமாகக் கொண்ட கட்டுப்பாட்டு ஒன்றியத்திடமிருந்து Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கையை பெற்றுள்ள துறையின் ஒரே உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. அதனூடாக, அதன் செயற்பாடுகளில் பச்சைஇல்ல வாயு வெளியேற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், New Anthoney’s Group சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட FSSC 22000 சான்றிதழை பெற்றுக் கொண்ட முதலாவது நிறுவனமாக திகழ்ந்து, துறையில் புதிய நியமத்தை ஏற்படுத்தியிருந்தது. உணவு பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் உயர் தரத்தை மீளுறுதி செய்திருந்தது. அதில், கடுமையான முன்னேற்பாடுகள் மற்றும் விலங்கு நலன்பேணல் கொள்கைகள் போன்றன அடங்கியுள்ளன. பிராந்தியத்தில் உணவு மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் நியமங்களை நிறுவுவதன் மூலமாக, தொழிற்துறையில் தொடர்ந்தும் New Anthoney’s Group முன்னுதாரணமாக திகழ்கின்றது.


Share with your friend