‘அறிவுத்திறன் மிக்க ஆய்வுகளால் எதிர்காலத்தை செம்மையாக்கல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SLIIT இன் SICASH 2024 மாநாடு புதிய பாதையை வெளிப்படுத்தியது

Share with your friend

SLIIT   இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தினால் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘SLIIT விஞ்ஞான மற்றும் மனிதநேய முன்னேற்றத்துக்கான சர்வதேச மாநாடு’ – SICASH 2024 கல்விசார் ஆய்வு மற்றும் புதுமையில் புதியதோர் அடைவுமட்டத்தைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிகழ்வு கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இப்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக நடைபெற்ற ளுஐஊயுளுர் மாநாடானது ‘அறிவுத்திறன் மிக்க ஆய்வுகளால் எதிர்காலத்தை செம்மையாக்கல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வியியலாளர்கள் தமது ஆய்வுகளைச் சமர்ப்பிப்பதற்கு சிறந்ததொரு தளமாக அமைந்த இந்த மாநாட்டில், பல்வேறு துறைகளிலிருந்து 118 ஆய்வுகளும் 72 தரம்மிக்க ஆய்வுப் பத்திரிகைகளும் சர்ப்பிக்கப்பட்டன. SICASH 2024 மாநாடு கடுமையான கல்விசார் தரத்தைப் பின்பற்றுகின்றது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த சமர்ப்பிப்புக்கள் அமைந்தன. ஆய்வுப் பத்திரிகைகள் சமர்ப்பிக்கும் அமர்வுக்கு அப்பால் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்படும் வகையில் ஒன்பது போஸ்டர்கள் முன்வைக்கப்பட்டன. பிரயோக விஞ்ஞானம், கல்வி, ஆங்கில மொழி மற்றும் இலக்கணம், சட்டம், கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல், தாதியியல் மற்றும் சுகாதார விஞ்ஞானம் மற்றும் உளவியல் போன்ற ஏழு முக்கிய துறைகளில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு கல்வியியலாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.

SICASH வருடாந்த மாநாடானது ஆய்வுத் துறைகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாநாடாக அமைந்திருப்பதுடன், உயர் கல்வியை வளர்ப்பதற்காக கல்விசார் ஆய்வுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தொடர்புகளை வளர்ப்பதிலும் SLIIT நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் University College London இன் மருந்தியல் பிரிவின் தலைவரும், மருந்துப் பொருட்கள் விஞ்ஞானப் பேராசிரியருமான கார்த் வில்லியம்ஸ் பிரதான உரை நிகழ்த்தினார். அத்துடன், வேந்தரும்,தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக்க, உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, சிரேஷ்ட பிரதி துணை வேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Edinburgh பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவப் பிரிவின் Translational Chemistry and Biomedical Imaging துறை பேராசிரியர் மார்க் வென்ட்ரெல், அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து Griffith பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் துறைசார் கல்விப் பிரிவின் மொழி மற்றும் இலக்கியல் கல்விக்கான இணை பேராசிரியர் ஜெனீஃபர் அல்ஃபரட், ஃபின்லாந்தின் ஆசிரியல் கல்வித் திணைக்களத்தின் துணைப் பேராசிரியர், கல்வி மொழிப் பேராசிரியர் மற்றும் இருமொழி மற்றும் பன்மொழி கல்வியியலில் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜோசஃபீன் மோட், அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்தின் சர்வதேச, தாதியியல் மற்றும் மருத்துவமாதுக்கள் பிரிவின் இணைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான ஸ்டெஃபேன் புச்சூச்சா உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சர்வதேச கல்விசார் நிபுணர்கள் உரைநிகழ்த்தியிருந்தனர். அத்துடன், சட்டத்தரணி திரு.ரஜீவ் அமரசூரிய, இங்கிலாந்தின் Hertfordshire  பல்கலைக்கழகத்தின் கல்விசார் உளவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் டிலந்தி வீரசிங்ஹ, இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி.ஹேமந்த கே.ஜே.ஏக்கநாயக்க ஆகியோரும் உரைநிகழ்த்தியிருந்தனர்.

SLIIT   இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மலித விஜேசுந்தர குறிப்பிடுகையில், “பரந்துபட்ட துறைகளில் சிறந்த ஆய்வுகள் மற்றும் கல்விசார் சிறப்புக்களை வளர்ப்பதில் SLIIT நிறுனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை SICASH மாநாடு பிரதிபலிக்கின்றது. உலகளாவிய ரீதியில் உள்ள நிபுணர்கள் மற்றும் உள்நாட்டுத் திறமையாளர்களை ஒருங்கே கொண்டுவருவதன் ஊடாக அதிநவீன ஆய்வுகளை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி இலங்கையின் எதிர்கால கல்வியை செம்மைப்படுத்துவதற்கான தளத்தையும் நாம் உருவாக்குகின்றோம்” என்றார்.

மாநாட்டுக்குப் பின்னர் ‘தொழில்நுட்ப மேம்பாட்டைக்கொண்ட மருந்து உருவாக்கம்’ என்ற தலைப்பில் மருந்தாக்கலின் புதுமைகள் மற்றும் உருவாக்கம் தொடர்பான முன்வைப்புக்களைக் கொண்ட சிறிய ஆய்வரங்கொன்றும் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்த் வில்லியம்ஸ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர மற்றும் பேராசிரியர் ஜயந்த விஜயபண்டார ஆகியோரின் பங்குபற்றல் இந்த ஆய்வரங்கிற்கு  முக்கியமாக அமைந்தது.

மாநாட்டின் செயற்பாடுகள் ProQuest Research Librar இல் வெளியிடப்படும் என்பதுடன், ஆய்வுகள் பரவலாக்கப்படுவதை உறுதிசெய்யப்படும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுகள் SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான ஆய்வுநூலில் பதிப்புச் செய்யப்படும்.

கலாநிதி மலித்த விஜேசுந்தர மற்றும் பேராசிரியர் கொலின் பீரிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பேராசிரியர் சரித ஜெயருக் பொதுத் தலைவராகவும், இணைத் தலைவர்களான  கலாநிதி நிரோஷா பிரியதர்ஷனி, கலாநிதி ருவினி மாதங்கதீர மற்றும் மாலிகா லக்மாலி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு கல்வியியல் ஆய்வை முன்னேற்றுவதிலும் உயர் கல்வியில் சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்ப்பதிலும் SLIIT  இன் அதிகரித்துவரும் செல்வாக்கை வெளிப்படுத்தியது.

SICASH மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற www.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.


Share with your friend